சோழ ரைட் முடித்த சில நாட்களிலே தொண்டை மண்டல பகுதிகளை சுற்றி
வர ஆசை வந்தது எனக்கு. அதனால் சில நாட்களாகவே பயண திட்டமிடல் செய்துக்கொண்டிருந்த நான்
ஒருவழியாக திட்டத்தை வரையறுத்தேன். பல தேடல்களுக்கு பிறகும், பல சூழ்நிலை ஆராய்வுகளுக்கு
பிறகும் கையில் குறிப்புடன் கிளம்ப தயாரா நிற்கையில்- சென்ற முறை சோழர் ரைடுக்கே அழைக்காமல்
சென்றதை கோபத்தோடு கடிந்துக்கொண்ட பிரவீனை இம்முறை அழைத்துக்கொள்வது என முடிவெடுத்து
பேசினேன். சொன்னது தான் தாமதம் உடனே சம்மதித்து விட்டான்.
காலை ஆறு மணிக்கு புறப்படுவதாக திட்டம். பிரவினின் தூரத்தை கணக்கில்
கொண்டு காலை ஏழாக மாற்றியமைக்கப்பட்டது. சரியாக 7.15க்கு அவன் தாம்பரம் வந்துவிட இருவரும்
கிளம்பினோம் அந்த GST சாலையில்.
காயார் - ஆடலீஸ்வரர்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் ஒரு வலது திரும்ப வேண்டும்.
திடீரென என் ஃபோனில் அன்று நெட் வேலை செய்யவில்லை. புண்ணியம் – பிரவின் என்னோடு இருந்தான்.
அவனுக்கு முன்னரே மேப்பின் குறிப்பை அனுப்பி வைத்திருந்தேன். அவன் பின்னால் உட்கார்ந்து
வழிக்காட்ட, ஒரு வலதின் திருப்பத்தின் பிறகு நாங்கள் சிட்டி வாழ்க்கையை தூரம் தள்ளிவிட்டு
காட்டுக்கு நடுவே அருமையான பயணத்தை தொடங்கிவிட்டோம். அப்பொழுதே எங்கள் பயணம் எப்படி
இருக்கும் என்பதை நாங்கள் ஊர்ஜிக்க முடிந்த ரம்மிய பயணம் அது.
சிறிது தூரத்தில் வயல் காட்டுக்கு அப்பால் ஒரு சிறிய கோவில்
இருப்பதை பார்த்தோம்.
‘அதுவா டா?’ பிரவீன் என்னை கேட்டான்.
‘அப்படி தான் மச்சி நினைக்கிறேன். பின்னால குளம் இருக்கானு பாரு..’
என்றேன். அவன் எக்கி பார்த்தான். குளம் இருந்தது. சட்டென அந்த காலி இடத்தில் வண்டியை
திருப்பி, ஒரு பெரிய மேட்டில் ஏற்றி வண்டியை அந்த கோவில் பக்கத்தில் நிறுத்தினேன்.
பூட்டப்பட்டிருந்தது. அங்கங்கே கல்வெட்டுகள் காணப்பட்டன. சிலைகள் கீழே கிடத்தப்பட்டிருந்தன.
சுற்றி பார்த்தோம். ஆதித்த சோழன் காலத்தியே கோவில் அது. அம்மன்னன் கொடுத்த கொடைகள்
அங்கு நிருவிக்கப்பட்டிருப்பதாய் படித்திருக்கிறேன். பிற்கால சோழ வரலாறு செழிப்படை
தோங்க முக்கிய காரணியான ஆதித்த சோழன் காலத்தில் அந்த ஊர் எப்படி இருந்திருக்கும் என்று
யோசிக்கையிலே கண்முன் விரிந்து நின்றது அந்த பழங்கால கற்பனை உலகம்.
செம்பாக்கம் – ஜம்புகேஸ்வரர்
அங்கிருந்து கிளம்பி மீண்டும் அதே சாலையில் சிறிது தூரம் சென்று
காட்டூர் என்னும் இடத்தில் நின்றோம். காட்டூர் பக்கத்தில் இருக்கும் செம்பாக்கம் என்பதற்கு
பதிலாக என் கூகிள் மேப் காட்டூர் என்றே காட்டிவிட அங்கு இருந்த ஒரு கோவிலின் வாசலில்
இருக்கும் ஒருவரை பிடித்தோம்.
‘அண்ணே… காட்டூர் எப்படிண்ணே போகணும்..?’ என்று நாங்கள் கேட்க
அவர் எங்களை முறைத்தார்.
‘இதான் காட்டூர்..’ என்றார். நாங்கள் சிரித்துக்கொண்டோம்.
‘அப்போ.. இங்க ஜம்புகேஸ்வரர் கோவில்..?’ நாங்கள் கேட்டோம்.
‘அப்படி எதுவும் தெரியாது..’ என்று சொல்லிவிட்டு அவர் இன்னொருவரை
கை காட்டினார். நாங்கள் அங்கு நகர்ந்தோம்.
‘ஐயா..’ என்றோம். அவர் காதில் அலைப்பேசியை வைத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார்.
மீண்டும் மேப் உதவியை நாடினோம். டோரா போவது போல.. ‘எங்க நாம
போறோம்..’ என்று கத்திகொண்டே நேராக சென்று, செங்கல்பட்டு சாலையை பிடித்து ஒரு இடது
ஒடித்து சிறிது தூரம் ஒற்றை அடி பாதையில் ஒய்யாரமாக சென்ற போது – அந்த அழகியல் கோவில்.
உள்ளே நாங்கள் வருவதை பார்த்துவிட்டு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த
ஐயர் ஓடிவந்து சன்னதியை திறந்துவிட்டார். இருவரும் உள்ளே சென்று வணங்கிவிட்டு வந்தோம்.
சுற்றி வந்தோம். முற்கால சோழன் கோச்செங்கணான் காலத்தில் எழுப்பப்பட்ட அழகிய கோவில்.
சோழர் கால கட்டிடக்கலை அப்படியே தொற்றி நின்றது. பிற்கால சோழர்கள் இதற்கு மேம்பணி செய்திருப்பதும்
ஒரு காரணம்.
பிரவீன் கொஞ்சம் வெளி சென்றிருக்க, நான் ஐயரிடம் பேச்சு கொடுத்தேன்.
அவர் அந்த கோவிலை பற்றி விளக்கினார். திடீரென,
‘ஒரு காலத்துல சன்னதில தண்ணீயோட சலசலப்பு தெரியும் தம்பி. எப்பவும்
சன்னதி ஈரமாவே இருக்கும். அப்படியே தண்ணீ காலுக்கு கீழ ஓடுறது தெரியும். போன வருசம்
கும்பாபிஷேக பணி நடந்துச்சு. டைல்ஸ் ஒட்டுனதுல என்ன ஆச்சுனு தெரியல… அப்பரம் ஒரு சலசலப்பும்
இல்ல’ அவர் வருத்ததோட சொல்லிக்கொண்டார். பக்கத்திலிருக்கும் ஏரியை பற்றியும் அவர் சொன்னார்.
நாங்கள் வெளியில் வந்து கொஞ்சம் பேசிக்கொண்டோம். பக்கத்திலே பெருமாள் கோவில் ஒன்று
இருப்பதும் தெரிந்தது.
‘அங்க போலாமா?’ பிரிவீன் கேட்டான்.
‘ப்ளான்டு ரைட் போகுறப்போ.. நூல் அதிகமா கிடைக்கும். அதையெல்லாம்
பிடிச்சு போனா ப்ளான்டு ரைட் முடிக்க முடியாது. நாம ப்ளான் பண்ணின போலவே போவோம்..’
நான் சொல்ல அவனும் சம்மதித்தான். இனி பழைய மகாபலிபுரம் சாலையை பிடித்து, கிழக்கு கடற்கரை
சாலையில் கல்பாக்கம் முந்தி விட்டலாபுரம் வரை பயணிக்க வேண்டும்…
விட்டலாபுரம்
முற்கால மூவேந்தர்களையும், பல்லவர்களையும் அறிந்த நாம் – பிற்காலத்தைய
விஜயநகர பேரரசை அந்த அளவுக்கு அறிந்திருக்கவில்லை. விஜயநகர பேரரசின் எல்லோருக்கும தெரிந்த
கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுப்பப்பட்டது. சிதிலமடைந்து கிடந்த கோவிலை மீண்டும் புனரமைத்து
அழகின் எடுத்துக்காட்டாய் நிறுவியிருக்கின்றனர். கோவிலின் அப்படி ஒரு அழகு, அப்படி
ஒரு அமைதி. நாங்கள் அன்று சென்ற அத்தனை கோவிலும் அந்த அமைதியின் ரம்மியத்தை தாங்கியிருந்தது.
உள்ளே செல்லும்பொழுதே ஒரு பெண் ஓடிவந்து,
‘சாமி வந்திருவார். உள்ள உக்காருங்க..’ என்றார். நாங்கள் சுற்றி
அதன் அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்கு பிறகு சன்னதியில் நுழைகையில்
உள்ளே அவர் கையில் ‘ஆன்ட்ராய்ட் டேப்ளட்டை’ வைத்து ஏதோ தள்ளிக்கொண்டிருந்தார்.
அட என்னடா இது.. என்று நாங்கள் சலித்துக்கொண்டு கும்பிட்டு கிளம்ப
எத்தனிக்கையில் ஒருவர் எங்களை தடுத்தார்.
‘இப்ப பூஜை முடிந்துடும்.. இருங்க. பிரசாதம் வாங்கிட்டு போங்க..’
என்றார். நாங்கள் அன்பின் வார்த்தையை தட்ட முடியாமல் அங்கேயே நின்றோம். பூஜை ஒவ்வொரு
மந்திரமாக பார்த்து பார்த்து டேப்ளட்டின் உதவியோடு முடிக்கப்பட. பூஜை செய்தவர் ஒரு
பழத்தையும், கொஞ்சம் பிரசாதத்தையும் கையில் எடுத்து வந்து, எங்களை முதலில் வரவேற்ற
அந்த பெண்ணை அழைத்தார்.
அவர் முந்தானையை முன்னால் விரித்து காட்ட – இவர் அவர் சேலையில்
கைபடாதவாறு தூரமாக நின்று அந்த பழத்தையும், பிரசாதத்தையும் அவர் சேலையில் போட்டார்.
நல்ல வேலை அவர் கை அந்த பெண் மீது பட்டுவிடவில்லை – தீட்டாகி இருக்கும் அல்லவா. என்னமோ
போடா மாதவா.. என்னும் போக்கில் நானும் பிரவீனும் அங்கிருந்த கிளம்ப – அந்த பெண் மீண்டும்
தடுத்தார்.
‘எங்க அவசரமா போறீக… இந்தாங்க.. பிரசாதம். தயிர் சாதம்.. சாப்புட்டு
போங்கயா..’ என்றார். நாங்கள் சிரித்துக்கொண்டே வாங்கி உண்டோம். கை கழுவிவிட்டு வருகையிலே
அவர் எங்களுக்கு குடிக்க தண்ணீரும் கொடுத்தார். மனமாற நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து
கிளம்பினோம்.
அடுத்து ஒரு டீ இருவரும் குடித்துவிட்டு கிளம்பினோம். பாலார்
பாலம் தாண்டி என்று மனதில் பதிய வைத்திருந்தோம். பாலார் பாலம் போய்க்கொண்டிருக்கும்போதே
பிரவீன் நிறுத்த சொன்னான். பாலார் பாலம் முன்பே திரும்பி இருக்கவேண்டும். சரி.. சென்று
திருப்பி வரவேண்டும். திருப்பி வந்தோம். இடமா வலதா என்று கேட்டேன். இடது என்றான். திரும்பி
பல தூரம் சென்றும் கோவில் வரவில்லை. என்ன என்று யோசித்துக்கொண்டே அலைப்பேசியை வாங்கி
பார்த்தால், நான் யூ எடுக்கும் முன் இடது திரும்பியிருக்க வேண்டும். நாங்கள் இடதுக்கு
பதில் இங்கு வலது திரும்பி வந்துக்கொண்டிருந்தோம். சரி.. வண்டியை திருப்பு. மீண்டும்
அதே இடம். இம்முறை மேப் உதவியோடே சென்று நிற்க அது எங்களை ஒரு குளத்துக்கரை அம்மனிடம்
அழைத்து சென்றது. விழித்துக்கொண்டே நிற்கையில்-பிரவீனை வண்டியை எடுக்க சொல்லிவிட்டு
நான் நடந்து சென்று ஒருவரிடம் கேட்டேன். அவர் இன்னும் பத்து தப்படி சென்று இடது பக்கம்
திரும்பவேண்டும் என்றார். அப்படியே சென்றோம்.
பிரம்மாண்டமாக இருந்திருக்கவேண்டிய ஒரு கோவில் – சுவடுகளை மட்டும்
தாங்கி அழகியலாய் நின்றுக்கொண்டிருந்தது. கோயில் வளாகத்தில் சிறுவர்கள் கோலி குண்டு
விளையாடிக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம்.
உள்ளே ஒரு வயதானவர் எங்களை பார்த்து சிரித்து உள்ளே அழைத்தார்.
‘ஐயர்.. ஏ சாமி.. ஆளு வந்திருக்கு வாய்யா..’ என்று கத்தினார்
அவர். நாங்கள் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றோம். நேராக பெருமாள் சந்நிதி. உள்ளே சென்று
கும்பிட்டுவிட்டு இறங்கும் போதே பக்கத்தில் சிவன் சந்நிதி. உள்ளே சென்றோம். கூடவே அவரும்
வந்தார். நாங்கள் பார்த்து நிற்கும்போது அவர் உள்ளே போக சொன்னார். நாங்கள் விழித்தோம்.
அவரே போங்கள் என்றார். அடுத்து நாங்கள் அந்த கற்பகிரகத்தினுள் நின்றோம். உடம்பில் ஏதோ
பாசிடிவ் எனர்ஜி பாய்ந்தது போல இருந்தது. பார்த்துவிட்டு வெளியில் வருகையில் ஐயர் வந்தார்.
‘யார் நீங்க..’ என்றார்.
‘சென்னையில இருந்து வந்திருக்கோம்..’ என்றோம். விசித்திரமாக
பார்த்தார்.
‘சென்னையில இருந்தா.. இங்க ஏன்..?’ என்றார். எங்களுக்கு அது
விநோதமாக பட்டது. மாறி மாறி பார்த்துக்கொண்டோம்.
‘இல்ல தம்பி.. இது கிராமத்து கோவில். ஒண்ணும் அவ்வளவு பேமஸ்
இல்ல.. அதான் கேட்டேன். இந்த பெருமாளுக்கும், சிவனுக்கும் ஒரு காலம் வரமாட்டது. இந்த
சிவன் இருக்கானே.. வருசத்துல 365 நாளும் சூரியன தன் மேல தாங்கிட்டு கிடக்கவன். கட்டுமானம்
அப்படி… மகேந்திர பல்லவன் காலத்து பொக்கிஷம்ல..’ அவர் சொல்ல நாங்கள் சிரித்துக்கொண்டோம்.
‘நெட்ல இருக்குங்க.. இந்த கோவில பத்தி’ என்றேன்.
‘நெட்லயா.. இருக்கா.. ஐயா… சிவன் வெளிய வர ஆரம்பிச்சுட்டான்
போல..’ சொல்லி சிலாகித்தார் அவர். நானும் என்னால் முடிந்த அளவுக்கு வெளி கொணர முயற்சி
செய்வதாய் அவருக்கு வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஆனூர் – அஸ்த்ரபுரீஸ்வரர்
அடுத்து நாங்கள் முன்னர் சென்ற சாலையிலே சென்றோம். பம்ப் செட்,
கால்வாய், வயல்வெளி என பக்கா கிராமத்து ரைடு அது. பாலாற்றை ஒட்டியே நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கையில்
ஒரு பேருந்து மட்டும் செல்லும் அந்த சாலையில் அந்த பயணம் ரம்மியமாக இருந்தது. ஒரு குட்டி
கடையில் நிறுத்தி, கூல்ட்ரிங்க்ஸ், சிப்ஸ் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம். பல தூரம்
கடந்து ஆனூரை அடைந்தோம். அங்கு ஒரு பெருமாள் கோவில் சிதிலமடைந்த நிலையில் இருக்க அதை
படம் பிடித்துக்கொண்டு தொடர்ந்து அஸ்த்ரபுரீஸ்வரரை காண சென்றோம்.
பல்லவ குலத்திலே… நான் விசித்திர மன்னனாக கருதும் நந்திவர்மன்
காலத்திலே கட்டப்பட்டது. அவன் ஆட்சிக்கு வந்த விதமே தனி சுவாரஸ்ய கதை. அதை பின்நாளில்
பார்ப்போம். அவன் காலத்திலே அழகிய கோவில் அது-இன்று சிதிலமடைந்து கல்லும் மண்ணுமாய்
கிடந்தது. நானும் பிரவினும் அதை சுற்றி வந்தோம். முன்னால் பின்னாலும் நடந்து வந்தோம்.
ஊர் மக்கள் இணைந்து அந்த கோவிலை சீரமைப்பதாக சொன்னர் – அதற்கு அத்தாட்சியாய் கோவில்
கோபுரம் வெள்ளை சுண்ணாப்புக்கொண்டிருந்தது. இன்னும் சுற்றி பார்க்கையில் ஒரு காலத்திய
ஊர் கோட்டையாய் திகழ்ந்திருக்கவேண்டிய இந்த அழகியலின் நிலையை வருந்தியப்படி நாங்கள்
கிளம்பி செங்கல்பட்டை அடைந்தோம். மதிய சாப்பாட்டை முடித்துக்கொண்டோம்.
சிறிது ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடர்ந்தோம். இம்முறை பல நாட்களாக
காத்திருப்பு பட்டியலில் இருந்த வல்லம் குடைவரை கோவில். பக்கத்திலிருந்தும் பல நாட்களாக
செல்லாமல் இருந்த இந்த கோவிலை பார்த்துவிட வேண்டி இம்முறை சென்றோம். மெயின் ரோட்டில்
சிறிது தூரம் சென்று, ஒரு இடது ஒடித்து – வீடுகளுக்கு மத்தியில் சென்றான் அங்கு ஒரு
குன்று. குன்றின் சில படிக்கட்டுகளில் பெருமாள் சந்நிதி – மேலே சிவன் சந்நிதி. பக்கத்திலே
அக்கோவிலை பற்றிய குறிப்பு.
குடைவரை கோவில் என்பது மலைகளை குடைந்து கோவில்கள் எழுப்புவது.
இது பல்லவர் காலத்தில் மிக பிரசித்தும். அப்படி அதிகமாக சென்னை வாசிகளுக்கு தெரிந்தது
– புலி குகை எனப்படும் குடைவரை கோவில். ஒற்றை பாறையில் குடைப்பட்டிருக்கும் – கிழக்கு
கடற்கரை சாலையில் அமைந்திருக்கிறது. மறந்துவிட்டேன்- அந்த புலி குகைக்கு அருகாமையிலே
பல காலத்துக்கு முன்னர் மன்னுக்குள் புதையுண்ட ஒரு முருகன் கோவிலும் இருக்கிறது. அந்த
இடத்தில் நின்று கொஞ்சம் வரலாற்றை சுவாசித்துக்கொள்ளுங்கள்.
சரி.. இப்பொழுது வல்லம் குகை கோவில். அங்கும் பேர் அமைதி. அழகு.
அங்கு ஒருவர் மட்டும் இருந்தார் நாங்கள் சென்றபோது. அவரிடம் அப்படி இப்படி பேச்சுகொடுத்துவிட்டு
அங்கேயே சிறிது நேரம் காற்றோடு லயித்து சொக்கி போனோம். எங்கள் நிம்மதியை குறைக்கும்
வண்ணம் எங்களை துரத்த குரங்குகள் அங்குமிங்கும் நடக்க – மாலை வரை அங்கேயே தங்கிவிடலாம்
என்று இருந்த எங்கள் எண்ணத்தை குழி தோண்டி புதைத்து எங்களை கிளம்ப வைத்தது.
நந்திவரம் – நந்தீஸ்வரர்
அங்கிருந்து கிளம்பி அந்த மெயின் ரோட்டில் சிறிது புகைபடங்களை
எடுத்துக்கொண்டு அடுத்து நந்திவரம் செல்வோம் என்று நான் சொல்கையிலே ப்ரவீன் தடுத்தான்.
செட்டிப்புண்ணியம் செல்ல விரும்புவதாய் சொன்னான். சரியென்று அங்கே கிளம்பி செட்டிப்புன்னியம்
செல்கையில் மணி 3.30. 4.30 மணிக்கு தான் நடை திறக்கப்படும் என்று சொன்னதால் மனதை மாற்றிக்கொண்டு
அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஏரிக்கரையோரம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.
கூடுவாஞ்சேரியின் மத்தியில் வலது திரும்பினால் கொஞ்ச தூரத்தில்
இருக்கிறது நந்திவரம். மற்ற கோவில்களை போன்று இங்கு அமைதி இல்லை, எதிர்பாரா விதமாய்
நிறைய பேர் அங்கு இருந்தனர். எல்லோரையும் கடந்து உள்ளே சென்று கடவுளை ப்ரார்த்தித்துவிட்டு
சுற்றிவந்தோம். ஏதோ உபாஷணைகள் நடந்துக்கொண்டிருந்தன. மரத்தின் நிழலில் கிடத்தப்பட்டிருந்த
ஒரு நந்தி மிகவும் ரம்மியமாக இருந்தது. சுற்றி திரும்பி பார்த்து ரசித்துக்கொண்டே வெளியேறினோம்.
இருவர் முகத்திலும் நிறை –மகிழ்வு. அடுத்து என்று யோசிக்கும்
முன்னே இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அதனால் அதோடு அந்த பயணம் நிறைவுற்றது. பிரவீனை
தாம்பரத்தில் இறக்கிவிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தேன்.
Comments
Post a Comment